Monday, May 11, 2020

3 வாரத்திலே சரும அழகை தரும் 5 வகை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்...



புதிய புதிய ஃபேஸ்வாஷ் மார்கெட்டில் கிடைக்கிறது. எதை வாங்குவது, எதை விடுவது எனத் தெரியாத நிலை. வீட்டிலே ஆர்கானிக் முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் செய்து பாருங்கள். பயன்படுத்தி பலன் கிடைத்த பிறகு நீங்கள் கடைக்கு சென்று எந்த ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ்வாஷ் பவுடரையும் வாங்க மாட்டீர்கள். அந்தளவுக்கு தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும். செய்முறை விளக்கங்கள் எப்படி எனப் பார்க்கலாம்.

1️⃣இன்ஸ்டன்ட் வொயிட் ஃபேஸ்வாஷ் பவுடர்
இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும். முகம் பிரகாசமாக மாறும். முகம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும். சருமம் பொலிவு பெறும். முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் நீங்கும். காம்ப்ளக்‌ஷன் இயற்கையாகவே அதிகரிக்கும். . ஆண்கள்  பயன்படுத்தினால், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாம்.
தேவையானவை
பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
ஓட்ஸ் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிரீன் டீ ஃபைன் பவுடர் - 3 டீஸ்பூன்
செய்முறை
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளவும். ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம். இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 3 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

2️⃣ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்
வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும்.
தேவையானவை
ஓட்ஸ் - ¾ கப்
உலர்ந்த ரோஜா இதழ்கள் - ¾ கப்
பாதாம் - 8


செய்முறை
இதையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவையான அளவு எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி, நன்கு தேய்த்துக் குளிக்கலாம். இதையே ஃபேஸ் பேக்காக போட்டு கொண்டு 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.

3️⃣ஹெர்பல் கிராம் ஃபேஸ் வாஷ் பவுடர்
கருத்திட்டுக்கள் நீங்கும். பருக்களின் வடு நீங்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும். சருமம் முழுவதும் ஒரே பளிச் நிறத்தைக் கொடுக்கும். சீரான ஸ்கின் டோன் கிடைக்கும்.
தேவையானவை
அரிசி மாவு - அரை கப்
பச்சை பயறு மாவு - அரை கப்
கடலைமாவு - அரை கப்
ஓட்ஸ் பவுடர் - அரை கப்
செய்முறை
இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம்.

4️⃣நோ மார்க்ஸ் ஃபேஸ் வாஷ் பவுடர்
பருக்கள் வராது. ஏற்கெனவே வந்த பருக்கள் நீங்கிவிடும். கிளியர் ஸ்கின் கிடைக்கும். சீரான, அழகான சருமமாக மாறும்.
தேவையானவை
முல்தானி மெட்டி - 3 டேபிள் ஸ்பூன்
ரோஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வேப்பிலை பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
துளசி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - ¾ கப்
செய்முறை
இவற்றை எல்லாம் ஒரு பெரிய பவுலில் கலந்து, கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம். இதையே ஃபேஸ் பேக்காக போட்டு கொண்டு 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம். 

5️⃣ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்
சருமத்தில் உள்ள கருமை நீங்கும். வாய் ஓரங்களில் கருப்பாக இருப்பது நீங்கி விடும். பரு, மரு எதுவும் வராது. கிளியர் ஸ்கின் கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

தேவையானவை
முல்தானி மெட்டி - 4 டேபிள் ஸ்பூன்
கடலமாவு - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கண்ணாடி பாத்திரத்தில் இவற்றை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். நன்றாக ஸ்பூனால் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இதைக் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி முகம், கழுத்து, காது, காது ஓரம் ஆகிய இடங்களில் தேய்த்து 2 நிமிடம் அப்படியே சர்குலர் மோஷனாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள்.

குறிப்பு
இந்த ஃபேஸ்வாஷ் பவுடரை நீங்கள் ஃபேஸ் மாஸ்காகவும் பயன்படுத்தலாம். உலர்ந்த சருமம் (Dry skin) இருப்பவர்கள், ஃபேஸ்வாஷ் பவுடருன் பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் (Oily Skin) உள்ளவர்கள், ஃபேஸ்வாஷ் பவுடருன் தயிர் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

மாதவிடாய்க் கால வலியைப் போக்க எளிய வழிகள்!



சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண்ணை மாதவிடாய், சட்டென்று முடக்கிவிடும்.  அந்தச் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடும்.

 மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை மருத்துவச் சொற்களில் 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhea) என்கின்றனர். ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இது தவறான அணுகுமுறை. வலிக்கான மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சோடா, குளிர்பானங்கள் போன்றவற்றைக் குடிக்கும் பழக்கம் சில பெண்களுக்கு இருக்கிறது. குளிர் பானங்கள் குடிப்பதால் உடனடியாக மூளைக்குச் சற்று புத்துணர்வு கிடைக்கும். குளிர்பானத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். அனைத்துக் குளிர்பானங்களிலும் வாயு சேர்க்கப்படுவதால் (Carbonated drinks) தற்காலிகமாக வயிறு உப்புசத்தை நீக்கும். ஆனால், குளிர்பானங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், அதில் சேர்க்கப்படும் வாயுவால் வயிற்றுப் புண் (Stomach Ulcer) ஏற்படும்.

இதைப் பெண்கள் பருகும்போது எலும்பு பாதிக்கப்பட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாதவிடாய் நாள்களில் முடிந்தவரை ஓய்வு மற்றும் சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டாலே வலிகளில் இருந்து தீர்வு பெறலாம்" என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.


மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுப்பதற்கும், வலி ஏற்பட்டால் அதைக் கையாள்வது குறித்தும் அவரே விளக்குகிறார். 


பெண்கள் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்தால் மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படாமல் தடுக்க முடியும். மாதவிடாய் வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே, ஒரேநிலையில் வெகு நேரம் நிற்பதோ அல்லது உட்காருவதோ கூடாது. அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது வயிற்றுப் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அசைவு ஏற்படும். இது மாதவிடாய் நாள்களில் வரும் வலியைத் தடுக்கும்.


உடலில் சூடு அதிகரிப்பதால் தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப்பையைப் பாதிக்கும். இதனால் மாதவிடாய் நாள்களில் அடிவயிற்றில் வலி ஏற்படும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம்.


மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக ரத்தப்போக்கைத் தடுக்கும்  வழிமுறைகள்:

1) நீர்ச்சத்துள்ள உணவுகள் - நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை
பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.

2)துவர்ப்பு உணவுகள்- மாங்கொட்டை (அவித்ததோ அல்லது பச்சையாகவோ), மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.

3) பிஞ்சு காய்கறிகள் - மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும். முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்துள்ள பயிர் வகைகள் மற்றும் பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் கர்ப்பப்பை சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.

4)செக்கு நல்லெண்ணெய்- செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.

5) கறிவேப்பிலை- கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
மோர்- மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.
உளுந்தங்கஞ்சி- உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.


⏩️⏩️பலம் தரும்  கஞ்சி



மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வுக்கு,   இயற்கையான தீர்வான , புரதம் நிறைந்த உணவான, வீட்டிலேயே இருக்கூடிய உளுந்தம்பருப்பு பால் கஞ்சி.
.
தேவையானவை:
வெள்ளை உளுந்து - கால் கப்
காய்ச்சிய பால் - ஒரு கப்
கருப்பட்டி - 60 கிராம்
பூண்டு தோல் நீக்கியது - 4 பல்
தண்ணீர் - ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்
புழுங்கல் அரிசி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்


செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, வெந்தயம், வெள்ளை உளுந்து, அரிசி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, பொன்நிறமாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். பின் அடிகனமான ஒரு பாத்திரத்தில் வறுத்துவைத்த வெந்தயம், உளுந்து, அரிசி, பூண்டுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் குழைய வேகவிடவும். உளுந்துக் கலவை வெந்ததும் அத்துடன் ஏலக்காய்த்தூள், கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதில் பால் சேர்த்துச் சாப்பிடவும்.

நன்றி :விகடன் ஹெல்த்

அழகுக்கு இரும்பு கீரை


முருங்கை மரத்தின் எல்லா பகுதிகளும் மனிதனுக்கு உதவுகின்றன. அதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று எல்லா பகுதிகளும் ஊட்டச்சத்து மற்றும் மினரல்கள் அடங்கியது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன் வசம் கொண்டுள்ளது முருங்கை. அது சரி. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி ஓரளவிற்கு நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.


⏩️⏩️ஆனால் முருங்கைக்காய் அழகு சிகிச்சையில் கூட பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அழகை அதிகரிப்பதற்காக முருங்கை பேஸ் மாஸ்க் இன்று பல்வேறு அழகு சிகிச்சையில் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சரும அழகை பாதுகாக்க, முருங்கை இலை மற்றும் எண்ணெய் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் இப்போது நாம் காணலாம்.
♥️வயது முதிர்வு
முருங்கை எண்ணெய் அல்லது முருங்கை இலை தூள் போன்றவற்றை முகத்தில் தடவுவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் தடுக்கப்படுகிறது. உங்கள் முகத்தின் தோல் பகுதியை இறுக்கமாக வைக்க முருங்கை உதவுகிறது. மேலும் சுருக்கங்கள், கொப்பளங்கள் போன்றவை மறைந்து உங்கள் முகம் இளமையாக மாறுகிறது.


♥️நிறத்தை மேம்படுத்த
முருங்கைக்காயை மேல்புறமாக சருமத்தில் தடவுவதால், உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கொப்பளங்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்தின் சமச்சீரற்ற தன்மையைப் போக்க உதவுகிறது. முருங்கை இலைகளின் விழுதை முகத்தில் உள்ள கருந்திட்டுகள் அல்லது கொப்பளங்களில் தடவுவதால் அவை எளிதில் மறைகின்றன.

♥️கட்டிகள் மற்றும் பருக்கள்
முருங்கையில் இருக்கும் பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, முருங்கை எண்ணெய்யை பருக்கள் மற்றும் கட்டிகளில் தடவுவதால் அவை மறுபடி தோன்றாமல் தடுக்கப்படுகின்றன. முருங்கை எண்ணெய்க்கு மாற்றாக முருங்கை இலைகளை அரைத்தும் கட்டிகளில் தடவலாம். ஆனால் சருமத்திற்கு சுயமாக எதாவது சிகிச்சை அளிக்கும் முன்னர்,தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று பின்னர் சிகிச்சையைத் தொடங்கலாம்.


♥️நச்சுகளை வெளியேற்ற
உடலில் உள்ள இரத்தத்தில் நச்சுகள் படிவதன் விளைவாக பருக்கள் மற்றும் கட்டிகள் தோன்றலாம். முருங்கை விதைகள் அல்லது முருங்கை தூளை தினமும் உட்கொள்வதால் இரத்தம் சுத்தம் அடைகிறது. இதனால் உங்கள் சருமம் சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக மாறுகிறது.

♥️சருமத் துளைகள்
சருமத்தில் பெரிதாக காணப்படும் துளைகளின் மீது செயல்பட்டு சருமத்தை இறுக்கமாக்கி துளைகளின் அளவைக் குறைக்க முருங்கை உதவுகிறது. முருங்கையில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கொலோஜென் புரதம் அதிகமாக இருப்பதால் துளைகளைக் குறைக்க உதவுகின்றன.

⏩️⏩️ஆரோக்கியமான சருமம் பெற முருங்கை பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
முருங்கை தூளில் உள்ள சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் காரணமாக இதனை பேஸ் மாஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
முருங்கை பேஸ்பேக்
முருங்கை இலைகளை நிழலில்  காயவைத்து பொடியாக்கினால் முருங்கை தூள் கிடைக்கும். இது அடர் பச்சை நிறத்தில் இருக்கும். 

➡️இந்த பேஸ் மாஸ்க் செய்வதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள்,
முருங்கை இலை தூள்,
தேன்,
பன்னீர்,
எலுமிச்சை சாறு
தண்ணீர்.
முருங்கை இலை தூளை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கலக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பேஸ்ட் பதம் வரும் வரையில் நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காலையில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
காய்ந்தவுடன் முகத்தை டவலில் துடைத்து பின்னர் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று மிருதுவாக மாறும்.

➡️கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பராமரிப்பிலும் முருங்கை இலை தூள் பயன்படுகிறது. ஆரோக்கியமான நீளமான கூந்தல் பெற இந்த தூளை நீங்கள் பயன்படுத்தலாம். முருங்கை தூளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக பொடுகு மற்றும் கூதல் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும் இவை நல்ல முறையில் உதவுகிறது.

உடல் எடையை குறைக்கும் முட்டை கோஸ்(கோவா)



உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டை கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். மேலும் இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.


முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் மற்றும் இது உருவாகிய காலம் 1000 BC என்று கூறப்படுகிறது. 

முட்டை கோஸ் இந்தியாவில் பிரபலமான உணவு வகைளில் ஒன்றாகும். FAST FOOD என்று அழைக்கப்படும் இந்த துரித உணவகங்களில் இந்த முட்டை கோஸை பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.
இந்த முட்டை கோஸை இப்படிப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவதால் எந்த ஒரு பயனும் இல்லை. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இதன் சத்துக்களை இழந்துவிடும். இந்த உண்மையை அறிந்ததாலோ என்னவோ மேலை நாடுகளில் பெரும்பாலான உணவகங்களில் இந்த முட்டை கோஸ் வகையான உணவுகளை பச்சையாக பரிமாறுகிறார்கள்.

முட்டைகோஸில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன. முட்டை கோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற் சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன மற்றும் புண்களை நிவர்த்தி செய்கிறது.
முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன இதனால் மலம் இலகுவாகக் கழிவதுடன் மூலம்,  மற்றும் மலக்குடல் கோளாறுகள் வராமல் தடுக்கின்றன.


முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.
வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.

🚫🚫தைரொக்சின் உள்ளவர்கள் முட்டை கோஸ் (கோவா ) உண்பதை தவிர்க்கவும்
  

முழுமையான சத்து முருங்கை


எளிதாக கிடைக்கும் முருங்கைக்காயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா....?


முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்னோவின்), பி3 (நியாசின்), பி6  (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். மேலும் மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு,  விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.

முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.

முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.

முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உங்கள் அழகுக்கு உருளை கிழங்கு



மிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக் :
உருளைக் கிழங்கை எல்லோருக்கும் பிடிக்கும். சிப்ஸ், வறுவல், மசாலா என்று எல்லா விதத்திலும் சுவை மிகுந்த ஒரு உணவாக இருப்பது உருளைக் கிழங்கு. எளிதிலும் விரைவாகவும் சமைக்கக்கூடிய ஒரு சௌகரியம் இந்த உருளைக்கிழங்கில் உண்டு. இதில் வைட்டமின் சி, பி 1 , பி 3 , பி 6, மற்றும் மினரல்கள் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது.

ஆகவே இந்த உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை புரியும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

💟உருளைக்கிழங்கு
முகத்தில் அசிங்கமாக இருக்கும் புள்ளிகள், அடையாளங்கள் மற்றும் கொப்பளங்களைப் போக்க உதவுகிறது. காயங்கள், கிருமிகள் மற்றும் புண்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கண் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வயது முதிர்ச்சியின் அறிகுறியைக் குறைக்கிறது. உங்கள் சருமத்தை மாசுபடுத்தும் சூரியன் வெளிப்பாட்டினால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழலுக்கான சேதத்தை பாதுகாக்கும் அன்டி ஆக்சிடென்ட் இவற்றில் உள்ளன.

💟உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், உங்கள் எல்லா வித சரும பிரச்சனைகளுக்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். சருமத்தில்உண்டாகும் அத்தனை பிரச்னையையும் உருளைக்கிழங்கிடம் நம்பி, ஒப்படைக்கலாம். அப்படி வீட்டிலேயே தயார் செய்யக் கூடிய, உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்குகள் இதோ உங்களுக்காக... ஒவ்வொரு சருமப் பிரச்னைக்கும் சில பிரத்யேக முறையில் சில வழிமுறைகளைக் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

1️⃣சரும வெண்மைக்கு
தேவையான பொருட்கள்
3 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
2 ஸ்பூன் தேன்
செய்முறை
உருளைச் சாறுடன் தேனை கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். 10-15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எப்படி வேலை செய்கிறது?
தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இதனால் சருமம் மிகவும் மென்மையாகிறது. உருளைக்கிழங்கு சாறு அமிலத்தன்மை வாய்ந்தது. இது இயற்கையாகவே ப்ளீச் போல் செயல்படும் தன்மை கொண்டது. இதனால் சருமம் பொலிவாக பளிச்சென்று ஆகிறது.


2️⃣பளபளக்கும் சருமத்திற்கு
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் உருளைச் சாறு
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 ஸ்பூன் தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை
உருளை மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் தேன் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கின் கட்டுப்படுத்தும் தன்மை, முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாக அப்படியே தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால், சிறிதளவு தண்ணீர் கலந்து பயன்படுத்தவும்.

3️⃣சரும வறட்சி, கட்டிகளுக்கு
உருளை மற்றும் தக்காளி பேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் உருளை விழுது அல்லது சாறு
1 ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு
1 ஸ்பூன் தேன்
செய்முறை
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சாறுகளை ஒன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்கவும். இதனை உங்கள் முகம் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவவும். கட்டி மறையும் வரை தினமும் செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
தாக்காளியும் உருளைக்கிழங்கும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தவை . இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கூறுகள், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை அடைப்பட்ட துளைகளை திறந்து விடுகின்றன. தக்காளி சாறு அமிலத்தன்மை அதிகம் கொண்டது. இதனால் சருமம் வறண்டு போகலாம். ஆகவே இதனுடன் கூடுதலாக தேன் சேர்த்துக் கொள்வதால் சருமம் நீர்ச்சத்துடன் இருக்க உதவுகிறது. .

4️⃣கருமையை நீக்க
உருளை மற்றும் அரிசி மாவு
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு
1 ஸ்பூன் அரிசி மாவு
1 ஸ்பூன் தேன்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு (தேவைப்பட்டால்)
செய்முறை
மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை உங்கள் முகத்தில் தடவி, காய விடவும். காய்ந்தவுடன் தண்ணீர் தெளித்து முகத்தை மென்மையாக சுழல் வடிவத்தில் ஸ்க்ரப் செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
உருளைக்கிழங்கு சருமத்தில் உள்ள சேதங்களைப் போக்கி, திட்டுகளைச் சரி செய்கிறது. அரிசி மாவு , சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்குகிறது. இதனால் உங்கள் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுகிறது. எலுமிச்சை சாறு, துளைகளை கெட்டியாக்குகிறது . தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. உங்கள் சருமம் சென்சிடிவ் சருமமாக இருந்தால், எலுமிச்சை சாற்றை நேரடியாக தடவாமல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பயன்படுத்தவும்.

5️⃣எண்ணெய் பசை சருமத்திற்கு
உருளைக் கிழங்கு மற்றும் ஓட்ஸ் பேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
3 உருளைக்கிழங்கு (வேகவைத்து தோல் உரித்தது )
2 ஸ்பூன் பால்
1 ஸ்பூன் ஓட்ஸ்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை :
உருளைக்கிழங்கை மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். இதனுடன் மற்ற மூலப்பொருட்களை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
உருளைக்கிழங்கு மற்றும் ஒட்ஸிற்கு சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் அழுக்கை உறிஞ்சும் தன்மை உள்ளது. ஓட்ஸ் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதனால் சருமம் குறைந்த அளவு எண்ணெய்யை சுரக்கிறது.

6️⃣முகத்தில் உள்ள திட்டுகள் குறைய,
உருளைக்கிழங்கு மற்றும் முல்தானிமிட்டி பேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
1 உருளைக் கிழங்கு`
1 ஸ்பூன் முல்தானிமிட்டி
செய்முறை
உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாறுடன் முல்தானிமிட்டியைக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் இந்த பேஸ்டை தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
சருமத்தில் உள்ள சேதங்களை சரிபடுத்தும் தன்மை முல்தானிமிட்டி மற்றும் உருளைக் கிழங்கில் உள்ளது. மேலும் இவை சருமத்தை வெண்மையாக்க உதவுகின்றன. இதனால் படிப்படியாக திட்டுகள் மற்றும் முகத்தில் உள்ள மற்ற அடையாளங்கள் குறைகின்றன. இந்த பேக் முகத்திற்கு அதிக வறட்சியைத் தரலாம். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது போதுமானது.

7️⃣முகத்தில் உள்ள சுருக்கங்களுக்கு
உருளைக்கிழங்கு , பால் மற்றும் கிளிசரின் பேஸ்பேக்
தேவையான பொருட்கள்
1 உருளைக்கிழங்கு (துருவியது)
2 ஸ்பூன் காய்ச்சாத பால்
3-4 துளிகள் கிளிசரின்
செய்முறை
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். சுருக்கங்கள் அதிகம் உள்ள இடங்கில் அதிகமாகத் தடவவும்.
15 நிமிடங்கள் அப்படியே காய விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதில் திறன் வாய்ந்தது கிளிசரின். இது சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மீட்டுத் தருகிறது. உருளைக்கிழங்கு மற்றும் கிளிசரின் ஆகிய இரண்டும், சுருக்கங்கள், கருவளையம் போன்றவற்றைக் குறைத்து சருமத்தை இறுக்கமாக்குகின்றன. சருமத்தில் தோல் உரிவது, எரிச்சல் உண்டாவது, வறண்டு போவது போன்ற பாதிப்புகள் தென்பட்டால், கிளிசரின் பயன்படுத்துவதை நிறுத்தலாம்.

8️⃣உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி பேஸ்மாஸ்க்
தேவையான பொருட்கள்
1 உருளைக் கிழங்கு (நறுக்கியது)
2 ஸ்ட்ராபெர்ரி
1/2 ஸ்பூன் தேன்
செய்முறை
உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் தேன் சேர்த்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் காத்திருந்து பின் தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ள ஒரு பழம். இது சருமத்தை தளர்த்துகிறது. இந்த பேக் , கொலோஜென் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது., முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகளை குறைத்து, வயது முதிர்வைப் போக்கி உங்களை இளமையாக காட்டுகிறது.

ஸ்கினுக்கும் பாஸ்டிங் இருக்கு தெரியுமா !!



`ஸ்கின் ஃபாஸ்டிங்' - சருமத்துக்கு அழகு, ஆரோக்கியம் தரும் புது ட்ரெண்டு!
சருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.


சமீபகாலமாக, `ஸ்கின் ஃபாஸ்டிங்' எனும் சருமப் பராமரிப்பு முறை ட்ரெண்டாகிவருகிறது. குறிப்பாக, சருமத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தின்மீது அக்கறையுள்ளவர்களிடையே வேகமாகப் பரவிவரும் இந்தப் பராமரிப்பு முறை குறித்து, சரும மருத்துவர் சேது விளக்குகிறார்.

ஸ்கின் ஃபாஸ்டிங் என்றால் என்ன?


வயிற்றை சில மணி நேரம் காலியா விட்டு, செரிமான உறுப்புகளுக்கு ஓய்வுகொடுக்கிறது, விரதம். அதுபோல, சருமத்தின்மீது எந்த காஸ்மெடிக் பூச்சும் இல்லாம, அதன் துவாரங்கள் அடைபடாம, குறைந்தபட்சம் சில மணி நேரம், சில நாள்கள் வரை விடுறது சரும விரதம்.''


இது எதற்காகச் செய்யப்படுகிறது?
நம்ம உடம்புல இருக்கிற எல்லா உறுப்புகளைவிடவும் பெரிய உறுப்பு, சருமம். ஆனா, அதை நாம சரியா பராமரிக்கிறோமா? அந்தக் காலத்துல தினமும் குளிக்கிறதைத் தவிர பெருசா எந்த விதமான சருமப் பராமரிப்பையும் யாரும் பண்ணதில்லை. அதிகபட்சம், பெண்கள் மஞ்சள் தேய்ச்சுச் குளிப்பாங்க அவ்வளவுதான். ஆனா இந்தக் காலத்துல, ஆணோ, பெண்ணோ யாரா இருந்தாலும் தங்களை அழகுபடுத்திக்கிற விஷயத்துல ரொம்பவே அக்கறை காட்டுறாங்க.

அழகா இருக்கணும்னு நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்காக நாம பண்ற விஷயங்கள் சரியானதுதானான்னு புரிஞ்சு பண்றது நல்லது. சரியில்லாத விஷயங்களைச் சரி பண்ணிக்கணும். அதுக்கான வழிதான் இந்த `ஸ்கின் ஃபாஸ்டிங்'.
யாரெல்லாம் இதைச் செய்யலாம்?
தினசரி மேக்கப் பொருள்களைப் பயன்படுத்துறவங்க, எந்நேரமும் மாய்ஸ்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்ற ஸ்கின்கேர் பொருள்களைப் பயன்படுத்துறவங்கன்னு சருமத்துல ஏதாச்சும் அப்ளை செய்துட்டே இருக்கிறவங்க எல்லாம், `ஸ்கின் ஃபாஸ்டிங்' முறையை ஃபாலோ பண்றது அவசியம்.

மேக்கப்
சிலர், வெளியே போனாலும் வீட்டுல இருந்தாலும், எந்நேரமும் பவுடர் போட்டுட்டுதான் இருக்கணும், லிஃப்ஸ்டிக் போடாம இருக்க முடியாதுனு கிட்டத்தட்ட அந்தப் பழக்கங்களுக்கு அடிமையா மாறிடுவாங்க. அந்த அடிக்‌ஷனிலிருந்து அவங்களை மீட்க, ஸ்கின் ஃபாஸ்டிங் கைகொடுக்கும்.


⏩️⏩️⏩️எப்படிச் செய்யணும்
* தினமும் குளிக்கிறது, முகம் கழுவுறதைத் தவிர வேற எந்த ஸ்கின் கேர் புராடக்ட்ஸையும் பயன்படுத்தாம சருமத்தை அப்படியே விடலாம். வீட்டுல இருக்கிறவங்களுக்கான வழிமுறை இது.
சருமப் பராமரிப்பு அவசியம்
இது, சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமா வெச்சிருக்க உதவும். ஓய்வு நேரங்களில், சருமத் துவாரங்களை (skin pores) அடைக்கும் விதமா சருமத்தில் காஸ்மெட்டிக், ஸ்கின் கேர் புராடக்ட் எதையும் பயன்படுத்தாம, சருமத்தை அப்படியே விடணும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கான வழிமுறை இது.


🚫🚫யாரெல்லாம் ஸ்கின் ஃபாஸ்டிங் மேற்கொள்ளக் கூடாது?
நார்மல், ஆய்லி, டிரை, காம்பினேஷன், சென்சிட்டிவ் போன்றவை முக்கியமான சரும வகைகள்.
ஆனா, சிலருக்கு சருமத்துல சோரியாசிஸ், பிக்மென்டேஷன், முகப்பருன்னு சில பிரச்னைகள் இருக்கும். இவங்க, `ஸ்கின் ஃபாஸ்டிங்கை'த் தவிர்த்து, சரும மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவங்க பரிந்துரைத்த மருந்துகளை சருமத்தில் தவறாமல் பயன்படுத்தணும்.


⏩️⏩️ஸ்கின் ஃபாஸ்டிங்கின் பலன்கள் என்னென்ன?
நிறைய பேர் விளம்பரங்கள், ஆன்லைன்ல புராடக்ட் ரிவ்யூ எல்லாம் பார்த்து, தங்களோட சருமத்துக்குப் பொருந்தாத ஸ்கின் கேர், மேக்கப் அயிட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்திட்டு வருவாங்க. தங்கள் சருமத்தோட ப்ளஸ், மைனஸ் என்னன்னே தெரியாம, அதை ஒரு நிபுணரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளாமல் இப்படி கண்ணில் படும் புராடக்ட்டுகளை எல்லாம் பயன்படுத்துவதால், அவங்க சருமம் தன் இயற்கையான தன்மையை இழந்துடும்.

தொடர்ந்து எல்லா புராடக்ட்டுகளையும் பயன்படுத்திட்டே வந்தால், சருமத்தின் இம்யூனிட்டியும் குறைஞ்சிடும். இதனால சருமத்தில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். மேலும், சருமம் தன் பிரச்னைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராத வகையில் இந்த காஸ்மெட்டிக் கோட்டிங்குகள் அமையும்.

ஆனா, ஸ்கின் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கும்போது, சருமத்தை அதன் இயல்போடு இருக்கவிடுவது மற்றும் தன் பிரச்னைகளை வெளிப்படுத்திக்க அனுமதிக்கிறது மூலமா, அதன் தற்போதைய தன்மை, சிக்கல்கள் என்னன்னு கண்டுபிடிச்சு சரிசெய்யலாம்.

அதாவது, குறைந்தது ஒரு வாரத்துக்கு எந்த காஸ்மெட்டிக் அயிட்டத்தையும் பயன்படுத்தாம இருக்கும்போது, சருமத்தின் ப்ளஸ், மைன்ஸ் மற்றும் பிரச்னைகளைத் தெரிஞ்சுக்கலாம். சருமம் இடையூறு இல்லாம சுவாசிக்கும்போது, இயல்பா சுரக்கும் சீபம், சருமத்தின் ஈரப்பதம்னு இதில் எது தேவையான அளவுக்கு சுரக்குது, எது தேவைக்கும் அதிகமா/குறைவா சுரக்குதுனு கண்டுபிடிக்க முடியும்.


மேலும், நீங்க இதுவரை பயன்படுத்திட்டு வந்த காஸ்மெட்டிக் அயிட்டங்களை நிறுத்தும்போது, அதன் விளைவா முகப்பரு, அலர்ஜி, சருமம் கறுத்துப்போவது மாதிரியான பிரச்னைகள் வந்தா, உடனடியா சரும மருத்துவரை அணுகி பிரச்னையைக் கண்டறிந்து சரிசெஞ்சுக்கலாம்.
மொத்தத்துல, ஒருவர் தன் சருமத்தின் தன்மை என்ன, ஏதாச்சும் பிரச்னை இருக்கான்னு கண்டுபிடிச்சு சரிசெய்றதுக்கு ஸ்கின் ஃபாஸ்ட்டிங் ரொம்பவே அவசியம்" என்று விளக்கமாகச் சொல்லி முடித்தார், டாக்டர் சேது ராமன். 

வீட்டிலே செய்வோம் டோனர்

சருமத்தை இளமையாக வைத்திருக்கும்  டோனர்கள்.. வீட்டிலேயே செய்யலாம்!


முக அழகுக்கு காஸ்ட்லியான காஸ்மெடிக்ஸ், பார்லர் சிகிச்சைகளைவிட, அடிப்படை சருமப் பராமரிப்பான கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங்தான் அவசியம். கிளென்சர் என்பது சருமத்தின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்கை நீக்கிச் சுத்தப்படுத்துவது. டோனர் என்பது சருமத் துவாரங்களை மூடச்செய்து இறுகச் செய்வது. மாய்ஸ்ச்சரைசர் என்பது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பது. கிளென்சர், மாயிஸ்ச்சரைசரின் முக்கியத்துவம் தெரிந்த அளவுக்குப் பலருக்கும் டோனரின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
சரும வகையைத்  தெரிந்துகொள்வது அவசியம்


``நம் சருமத்தில் இயற்கையாவே சீபம் என்னும் எண்ணெய் சுரக்கும். சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் வழியாக கிருமிகள் ஊடுருவாமல் பாதுகாப்பதுதான் சீபத்தின் வேலை. சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் சீபம் உதவும். இது குறைவாகச் சுரந்தால் வறண்ட சருமம், சரியான அளவில் சுரந்தால் நார்மல் சருமம், அதிகமாகச் சுரந்தால் எண்ணெய்ப்பசை சருமம் எனத் தெரிந்துகொள்ளலாம்.

சருமத்தைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் கிளென்சரில் காரத்தன்மை அதிகமாக இருக்கும். இது சருமத்துவாரங்களை விரிவடையச் செய்து அடைந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றும். விரிந்த சருமத்தை அப்படியே விட்டால் தூசு மற்றும் கிருமிகள் சருமத்துக்குள் ஊடுருவிடும். அதனால் கிளென்சிங் செய்ததும் kat டோனர் பயன்படுத்த வேண்டும்.


டோனர் சருமத்துவாரங்களைச் சுருங்கச்செய்து சருமத்தை இறுக்கமாக்கும். இது பார்ப்பதற்கு தண்ணீர் மாதிரி இருக்கும். இதைத் தொடர்ந்து மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். CTM (Cleansing- Toning- Moisturising) எனப்படும் இந்த ரொட்டீனை முறையாகப் பின்பற்றினாலே சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்'' என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, வீட்டிலேயே செய்யக்கூடிய டோனர் வகைகளை செய்முறையுடன் விளக்குகிறார்.

➡️பன்னீர் டோனர்



பன்னீர் ஒரு சிறந்த டோனர். பூக்கடைகளில் மாலை செய்ய உபயோகப்படுத்தும் சாதாரண பன்னீர் ரோஜா இதழ்கள் இருந்தாலே போதும், வீட்டிலேயே சுத்தமான பன்னீரை சுலபமாகத் தயாரித்துவிடலாம். ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி, சூடு ஆறும்முன் 15 கிராம் ரோஜா இதழ்களை அதில் போட்டு பாத்திரத்தை மூடி வையுங்கள்.
இரண்டு மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால், தண்ணீர் வெளிர் பிங்க் நிறத்தில் மாறி இருக்கும். இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பஞ்சை பன்னீரில் நனைத்து முகம் முழுவதும் பூசி அப்படியே விட்டுவிட்டால், சருமம் இறுக்கமாகவும் பொலிவாகவும் மாறும்.
கண்களில் கருவளையம், கண்களுக்குக் கீழ் பை போன்ற வீக்கம் இருப்பவர்கள், ரோஜா மற்றும் சாமந்திப் பூ இதழ்கள் இரண்டையும் சேர்த்து 15 கிராம் எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் கொதிக்கவைத்த தண்ணீரில் பூ இதழ்களைப் போட்டு மூடிவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும். தொடர்ந்து பயன்படுத்தும்போது கண்களின் கருவளையம் மற்றும் வீக்கம் குறைந்து கண்கள் பிரகாசமாகும்.

➡️கற்றாழை டோனர்
சோற்றுக் கற்றாழை எனப்படும் அலோவேராவை வீட்டில் ஒரு சிறு தொட்டியிலேயே வளர்த்துவிட முடியும். தொட்டியில் வளரும் கற்றாழையிலிருந்து. தினமும் ஒரு துண்டை வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதைக் குறுக்குவாக்கில் வெட்டி உள்ளிருக்கும் சதைப்பகுதியைத் தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். அதைக் கைகளால் மசித்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் அப்ளை செய்து அப்படியே விட்டுவிடவும். இது சருமத்தை டைட்டாக்கி, இளமையாக வைத்திருக்கும்.

➡️துளசி - புதினா டோனர்
எண்ணெய்ப்பசை சருமத்தினர், துளசி மற்றும் புதினாவிலிருந்து தயாரிக்கும் டோனரைப் பயன்படுத்தினால் சருமத்தில் சீபம் சுரக்கும் அளவைக் கட்டுப்படுத்தலாம். இதனால் எந்நேரமும் சருமம் எண்ணெய் வழியாமல், பொலிவுடன் இருக்கும்.
துளசி மற்றும் புதினா இரண்டையும் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். கொதிக்கவைத்து இறக்கிய ஒரு லிட்டர் வெந்நீரில் துளசி மற்றும் புதினாவைச் சேர்த்து மூடிவிடவும். இரண்டு மணிநேரம் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய்ப்பசை சருமத்தினர் மட்டுமல்லாமல், முகப்பரு, கரும்புள்ளிகள், பிளாக் ஹெட்ஸ் எனப் பிரச்னைக்குரிய சருமத்தினருக்கெல்லாம் இந்த டோனர் ஒரு வரப்பிரசாதம். தினமும் இதில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவிவர சருமப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

➡️லாவண்டர் டோனர்
கடைகளில் கிடைக்கக்கூடிய 150 மி.லி கொள்ளளவுள்ள ஸ்பிரே பாட்டிலும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கக்கூடிய லாவண்டர் ஆயிலையும் வாங்கிக் கொள்ளவும்.
லாவண்டர் ஆயில்
ஸ்பிரே பாட்டிலில் 20 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை விடவும். பிறகு ஸ்பிரே பாட்டிலில் ஐஸ் தண்ணீரை நிரப்பி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். நீங்கள் சோர்வாக இருக்கும்போதும் முகம் பொலிவிழந்து இருக்கும்போதும் இந்த ஸ்பிரே பாட்டிலில் உள்ள டோனரை முகத்தில் ஸ்பிரே செய்துகொண்டால் இன்ஸ்டன்ட் புத்துணர்வு கிடைக்கும்.

➡️வெட்டிவேர் - ரோஸ் டோனர்
ஃபிரிட்ஜ் அறிமுகமாவதற்கு முன், மண்பானையில் நீரூற்றி அதில் வெட்டிவேரைப் போட்டுவைத்து அந்த நீரை குடித்து வந்தார்கள். சுவையும் மணமும் சேர்ந்து குடிக்கவும் குளுமையாக இருக்கும் வெட்டிவேர் தண்ணீர். உடலுக்குக் குளிர்ச்சி தரும். கோடைக்காலத்தில் வியர்க்குரு பாதிப்பிலிருந்து தப்பிக்க, வெட்டிவேர் சிறந்த பலனளிக்கும்.
சுத்தப்படுத்திய வெட்டிவேர் ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும். கொதிக்கவைத்து இறக்கிய வெந்நீரில் வெட்டிவேரைப் போட்டு மூடிவைக்கவும். இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு இந்த நீரை வடிகட்டி அதில் 20 சொட்டுகள் ரோஸ் ஆயில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். குளித்து முடித்து உடலைத் துடைத்ததும் இந்த வெட்டிவேர் தண்ணீரை முகம் மற்றும் உடல் முழுவதுமே ஸ்பிரே செய்துகொள்ளலாம். இது சருமத்தை வியர்க்குருவிலிருந்து பாதுகாப்பதுடன் துர்நாற்றத்தையும் போக்கும்.

➡️வெள்ளரி - லெமன் டோனர்
ஒரு வெள்ளரிக்காயைத் தோல் மற்றும் விதை நீக்கித் துருவிக்கொள்ளவும். இதைப் பிழிந்து சாறெடுக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கக்கூடிய ஐஸ் ட்ரேயின் ஒவ்வொரு குழியும் முக்கால்பாகம் நிரம்பும்வரை வெள்ளரிச்சாற்றை ஊற்றவும். பின்னர் மீதமிருக்கும் இடத்தில் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.

➡️வெள்ளரி - லெமன் ஐஸ் கியூப்ஸ் 


ஐஸ் ட்ரேயை ஃப்ரீஸரில் வைத்து உறையவைக்கவும். தேவையான நேரத்தில் ஒரு ஐஸ் துண்டை எடுத்து, ஒரு துணியில் சுற்றி முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் ஒற்றி எடுக்கவும். இது சருமத்தை இறுகச் செய்வதுடன் சருமநிறத்தை மேம்படுத்திப் பளபளப்பைக் கூட்டும்.


வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் முன்னரும், வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் முகத்தை கிளென்ஸ் செய்யவும். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள டோனரில் உங்களுக்குப் பொருத்தமான டோனரை முகத்தில் அப்ளை செய்யவும்.
பொலிவான சருமத்துக்குப் பராமரிப்பு அவசியம்
கடைசியாக, உங்கள் சருமத்துக்குப் பொருத்தமான மாய்ஸ்ச்சரைசரை அப்ளை செய்துகொள்ளவும். வெளியே கிளம்பும் முன் மாய்ஸ்ச்சரைசருக்கு மேல் சன் ஸ்க்ரீன் லோஷனைக் கட்டாயம் அப்ளை செய்யவும். இதனால் முகம் எப்போதும் பளிச்சென பிரகாசிக்கும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...