Sunday, May 24, 2020

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.


கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.
கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.
மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.

மெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.
மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கான ‘மேமோகிராம்’ டெஸ்டும் செய்து பாருங்கள்.

ஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.


சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.


குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.
மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.
பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.
கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்!


மனித உடலின் நிறமூர்த்தத்தில்  இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.


மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.


பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர் போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.

நன்றி - குமுதம் சினெகிதி


PMS-மாதவிடாய் டென்சன் - தீர்வு என்ன?



பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான்.

Premenstrual Syndrome.. அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!


சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. 


அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. 

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.


மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். 

இளம் பெண்களின் ஒற்றைத்
தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்...

 வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.


பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே மாதவிடாய் ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். 

இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.


ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். 

எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!
பொதுவாகத் மாதவிடாய்  கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்! சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான்!


பொதுவாக, மாதவிடாய்  கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் 

➡️➡️உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்?


⏩️கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
⏩️உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
⏩️PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
⏩️மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
⏩️காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு PMS ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.
⏩️7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.
⏩️இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
⏩️மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.
⏩️மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!
⏩️இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!
💟💟PMS லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!
நன்றி - குமுதம் ஹெல்த்

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...