Thursday, May 28, 2020

கறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..!


முடி அழகு முக்கால் அழகு என்பது முதுமொழி. எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். தலைமுடியைப் பேணிக் காப்பதற்கும், சிறப்பான முறையில் பராமரிப்பதற்கும் தலைமுடி செழுமையாக வளர்வதற்கும் பெரிதும் உதவுகிறது கறிவேப்பிலை. அதன் சிறப்புகள் பற்றியும், மூலிகை குணங்கள் பற்றியும் பார்ப்போம்.


முறையா கோயங்கி (Murraya koenigii) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, சிறு மரம் (அல்லது) பெரும் செடியாக வளரக்கூடியது. வேம்பில் நில வேம்பு, மர வேம்பு, நாட்டு வேம்பு, நீர் வேம்பு, கரி வேம்பு எனப் பல வகைகள் உண்டு. இந்த கரி வேம்புதான் கறிவேப்பிலை என்று அழைக்கப்படுகின்றது.

மருத்துவப் பயன்கள்

⏩️கறிவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஓர் அற்புதமான மருந்தாகும். மேலும் இதன் சாறு கண்களைப் பாதுகாத்து, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்னை சரியாகும்.

⏩️இதன் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்திவர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு பலன் தரும்.

⏩️நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

⏩️கறிவேப்பிலை டீ
இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து  கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர முடி வளரும். இளநரை சரியாகும்.

⏩️நெல்லி-கறிவேப்பிலை ஜூஸ்
மூன்று நெல்லிக்காயை எடுத்து, கொட்டை நீக்கி, கைப்பிடி கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.

⏩️கறிவேப்பிலை சாதம்
தேவையான கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி, பொடி செய்துகொள்ள வேண்டும். சூடான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு அரைத்த பொடியை சேர்த்து, அதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டு வரலாம்.


⏩️கறிவேப்பிலை துவையல்
தலா ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை வாணலியில்  வறுத்து எடுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, இரண்டு சின்ன வெங்காயம், காரத்துக்கு ஏற்ற காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் இவற்றை சேர்த்து, உப்பு, தேங்காய், சிறிதளவு புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். துவையல் தயார். வாரம் இருமுறை சாப்பிட்டுவர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்னை தடுக்கப்படும்.

⏩️முடி வளர
இதன் இலைகளை அரைத்து அரைநெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.

⏩️அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டி சில்வர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர முடி செழுமையாக வளரும்.

⏩️உடல் குளிர்ச்சி உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலையை காய்ச்சி தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தொடர்ந்து தேய்த்து வர முடி நன்கு வளரும்.

⏩️நரைமுடி உள்ளவர்களுக்கு
கறிவேப்பிலை இலையில் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.

⏩️பொடுகு பிரச்னைக்கு
கறிவேப்பிலையுடன் இரண்டு மிளகு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்திவந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.

நன்றி vik

மாதவிடாய் பற்றி A டூ Z சந்தேகங்கள்... தீர்வுகள்...!


உலகம் உருவானதிலிருந்தே பெண்களின் உடலில் நிகழ்கிற மாதவிடாய் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அது வலியுடன் நிகழ்கிறதா; அதுதொடர்பாகப் பெண்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்கின்றனவா என்கிற கேள்விகளெல்லாம் சமுதாயத்தில் எழவே இல்லை. காரணம், அதுவொரு ரகசிய நிகழ்வாக, வெளிப்படையாகப் பேசக்கூடாத நிகழ்வாகவே நம் எல்லோராலும் நினைக்கப்பட்டதுதான்.
ஆனால், சமீப சில வருடங்களாக மாதவிடாய் குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பெண்கள் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியான கேள்விகளுக்கும் சந்தேங்களுக்கும் இயற்கை மருத்துவர் யோ.தீபா இங்கே தீர்வு சொல்கிறார்.

1. பீரியட்ஸ் வலி ஏன் ஏற்படுகிறது?

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 - 5 நாள்கள் வரை நிகழும். கருப்பைச் சுருங்கி விரிவதில் இரண்டு விதம் இருக்கின்றன. ஒன்று, மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விரியும். அல்லது சுருங்கி விரிகிற வேலையைச் சரியாகச் செய்யாது. இதுதான் பீரியட்ஸ் வலிக்கான காரணம். இப்படியல்லாது கருப்பை சரியாகச் சுருங்கி விரிய ஆரம்பித்தால், சீரான ரத்தப்போக்கு நிகழ ஆரம்பித்துவிடும். சீரான ரத்தப்போக்கு வந்தவுடனே பீரியட்ஸ் வலியும் படிப்படியாகக் குறைந்துவிடும்.

2. யாருக்கெல்லாம் பீரியட்ஸ் வலி வரும்?

வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.

3. இந்த வலி வராமல் தடுக்க முடியுமா?

உடம்பில் வாயு சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுங்கள். வாயுவை வெளியேற்றுகிற பவன முக்தாசனம், சஸங்காசனம் இரண்டையும் ஒரு யோகா நிபுணரிடம் கற்றுக்கொண்டு செய்யுங்கள். பீரியட்ஸ் நாள்களில் உடல் உஷ்ணம் தணிக்க ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடியைக் கலந்து குடியுங்கள். பீரியட்ஸ் வலியிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

4. ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகுமா?

ஹார்மோன் சீரற்று இருப்பதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணம். இதைச் சரிசெய்ய சில யோகாசனங்கள் இருக்கின்றன. நான், சுலபமான தீர்வு ஒன்றைச் சொல்கிறேன். 100 கிராம் பனைவெல்லத்தை அடுப்பில் வைத்து இளக்குங்கள். இதனுடன் ஒரு முழுப் பூண்டை தோலுரித்துப் சிறியதாக போட்டுக் கிளறுங்கள். பிறகு, 50 கிராம் பொடித்த கருஞ்சீரகத்தைப் போட்டுக் கிளறுங்கள். கலவை இறுகி லேகியம் பதத்துக்கு வந்ததும் ஆறவிட்டு, அரை நெல்லிக்காய் அளவுக்குச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இதைத் தினமும் சாப்பிட்டு வர, சில மாதங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். நிறைய தண்ணீர் குடிப்பதும் மாதவிடாய் சீராவதற்கான ஒரு வழி.


5. சடங்காகும் பெண் குழந்தைகளுக்கு முதலில் எத்தனை நாள் மாதவிடாய் நிகழும்... அது எப்போது ஒழுங்குக்கு வரும்?

மாதவிடாய் நிகழும் நாள் கணக்கு சிறுமிக்குச் சிறுமி வேறுபடும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 10 நாள்கள் நிகழும். சில சிறுமிகளுக்கு தொடர்ந்து 15 நாள்கள் நிகழலாம். சிலருக்கு ஒரு மாதவிடாய் முடிந்த 15 நாளிலேயே அடுத்தது வந்துவிடலாம். ஹார்மோன்கள் சீராகி  28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வர ஆறு மாதங்களிருந்து ஒரு வருடம் வரை ஆகும். 

6. மாதவிடாய் நேரத்தில் காய்ச்சல் மாத்திரை சாப்பிடலாமா?

மாதவிடாயின்போது கருப்பை சுருங்கி விரியும். அப்படிச் சுருங்கி விரியும்போது பெண்களின் உடலில் உஷ்ணம் அதிகமாகும். இந்த நேரத்தில் உடல் கதகதப்பாக இருப்பதைப் பல பெண்கள், 'உடம்பு சுடுது; பீவர் வந்துடுச்சு' என்று நினைத்துக்கொண்டு ஏதோவொரு காய்ச்சல் மாத்திரையைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? காய்ச்சல் மாத்திரைகளுக்கு வலியைக் குறைக்கிற தன்மையும் இருக்கிறது. அதைச் சாப்பிட்டவுடன் உடல் சட்டென்று வியர்த்து உஷ்ணம் குறைவதோடு, மாதவிடாய் நேரத்து வலியையும் உடனே குறைக்கும். பல இளம்பெண்கள், 'ஆஹா... காய்ச்சல் மாத்திரை போட்டால் பீரியட்ஸ் வலி குறைகிறதே' என்று இந்தப் பழக்கத்தை மாதந்தோறும் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதன் விளைவாகப் பின்னாளில் கருப்பையில் நீர்க்கட்டி வருவதில் ஆரம்பித்து, நார்க்கட்டி, குழந்தையின்மை என்று பிரச்னைகள் வரிசைகட்டலாம். 
8. பீரியட்ஸ் நேரத்தில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன?

வாயுத்தொல்லை தராத, எளிமையாகச் செரிமானமாகக்கூடிய எந்த உணவையும் சாப்பிடலாம். கூடவே, பழங்கள், நட்ஸ், டிரை ப்ரூட்ஸ் சாப்பிடுங்கள். அதிகப் புரதம் நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள், ஜங்க் புட்ஸ், பாட்டில் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

9. மாதவிடாய் நாள்களில் பிறப்புறுப்புப் பகுதியில் சோப் வாஷ் செய்வது சரியா?
சோப், வஜைனல் வாஷ் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிக்கு மட்டுமே பயன்படுத்தவும். உள்பகுதியை நாப்கின் மாற்றும்போதெல்லாம் வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும். சிலர் பீரியட்ஸ் நேர கசகசப்புத் தாங்காமல் பிறப்புறுப்பின் உள்பகுதியிலும் சோப் வாஷ் செய்வார்கள். இது தவறு. ஒவ்வொரு மாதமும் இப்படியே செய்துவந்தால், அந்தப் பகுதியில் இருக்கிற வழுவழுப்புத்தன்மை சுத்தமாகப் போய் வறண்டுவிடும். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பகுதியில் புண் வந்துவிட்டால், அது ஆறவே ஆறாது.

10. மாதவிடாய் உதிரத்தின் நிறத்தை வைத்து நம் ஆரோக்கிய நிலையை அறிந்துகொள்ள இயலுமா?
நல்ல சிவப்பு நிறம்தான் மாதவிடாய் உதிரத்தின் சரியான நிறம். பிரவுன் கலரில் நீர்போல வெளியேறினால், கருப்பையில் கசடு இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியைச் சேர்த்து தினமும் குடித்து வந்தால், கசடுகள் நீங்கி உதிரம் சிவப்பு நிறமாக வெளியேறும். 

11. மாதவிடாய் நாள்களில் ஸ்வீட் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும் என்று சொல்லப்படுகிறதே...
மாதவிடாய் நாள்களில் இனிப்புச் சாப்பிட்டால், ரத்தப்போக்கு அதிகமாகாது. பொதுவாக இனிப்புச்சுவை மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதால், அந்த சந்தோஷம் ரத்தப்போக்கை சுலபமாக்கிக் கொடுக்கும். இதனால், அந்த நேரத்து வலி குறைந்து சௌகர்யமாக உணர்வீர்கள். இப்படிச் சுலபமாக ரத்தம் வெளியேறுவதைத்தான் 'பீரியட்ஸ் அதிகமா போகுது' என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா? அலட்சியம் வேண்டாம்!

மாதவிடாய் பற்றிய விழிப்புஉணர்வு, அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. அதிலும் சாதாரணமாக அல்ல... எழுத்து வடிவத்தைத் தாண்டி, திரைவடித்துக்கே வந்துவிட்டது. உதாரணமாக, 'பேடு மேன்' (Pad man) போன்ற படங்கள் மக்களால் வரவேற்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் ஆரோக்கியமான சூழல்தானே! 

இதுபோன்ற விழிப்புஉணர்வுகளில் ஒன்றுதான், மாதவிடாய் காலத்தில் உடல்நலத்தின் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அக்கறை.
'அந்த நேரத்தில் உனக்கு வயிறு வலிக்குமா?’, `எனக்கு வலியே இருக்காது. ஆனாலும், அதிகமா ரத்தப்போக்கு இருக்கும்', 'எனக்கு அந்த நாள்களில் பயங்கரமா வயிறு வலிக்கும். மாத்திரை போடலைன்னா வலி குறையவே குறையாது'... இப்படியான மாதவிடாய்காலச் சிக்கல்களை, சில உரையாடல்களை பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு சூழலில் நிச்சயம் கேட்டிருப்பார்கள் அல்லது அவர்களே சொல்லியிருப்பார்கள். வலியுணர்வுபோலவே, மாதவிடாய் காலத்துக்கென சில பிரத்யேகப் பிரச்னைகளும் இருக்கின்றன. 

`உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய்காலச் சிக்கல் எது?’ என்று கேட்டால், அதிகமான அல்லது குறைவான ரத்தப்போக்கு, மூட் ஸ்விங், பின் முதுகுவலி, கால்வலி, அடிவயிற்றில் வலி... என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னையைக் கூறுவார்கள்.
மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குறித்து மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலத்திடம் கேட்டோம்...


``மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
எது அதிக ரத்தப்போக்கு?
அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள்தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.
அதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...


வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.

⏩️20 - 25 வயதுள்ளவர்கள்:
`Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

⏩️25 முதல் 35 வயதுள்ளவர்கள்:
இந்த வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.

⏩️45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு):
அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.
எதனால் ஏற்படுகிறது?
* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.

* மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.

* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.
* தைராய்டு பிரச்னைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.


➡️➡️உணவுமுறை மாற்றங்கள்:
பொதுவாகவே நிறையப் பேருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. ரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி’’ என்கிறார் வினுதா அருணாச்சலம்.

சளி, இருமல் விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்தியம்!


சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும்.
பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி?

⏩️உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்
தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்;  தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.


⏩️இஞ்சி

இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.  இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

⏩️பூண்டு
நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.

⏩️ஆளி விதை
சிறிது ஆளி விதையை நீரில் கொதிக்கவைத்தால் பசை மாதிரி ஆகிவிடும். இதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவர தொண்டை வீக்கம் குறையும்.

⏩️கருமிளகு டீ

கருமிளகு இருமல், சளிக்கு மிக நல்ல மருந்து. கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்.  ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன்  தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும்.  15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.


⏩️பால் மற்றும் மஞ்சள்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

⏩️வெங்காய சிரப்

ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும்.  அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன்  ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.


⏩️⏩️⏩️⏩️எளிய வீட்டு மருந்து
சளி, இருமலைப் போக்கும்  இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும்.  சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி  தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


⏩️⏩️சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு.  இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.


நன்றி -விகடன் ஹெல்த்

மாதவிடாய் கால வலிகளை குறைக்கும் ஹெர்பல் டீ


பீரியட்ஸ் தினங்களில் பெண்களுக்கு வயிற்று வலியுடன் அவதிப்படுவதை பார்க்கலாம். இந்த வலி உலகமெங்கும் உள்ள பெண்கள் அனுபவிக்கிறார்கள். கருப்பையின் உள்புறச் சதைகள் வீக்கம் காரணமாகவே இந்த வலி ஏற்படுகிறது. பெருஞ்சீரகம் இதற்கு நல்ல வலி நிவாரணியாக செயல்படும். இது  ஒரு  பாரம்பரிய வைத்திய முறை.


மாதவிடாய் கால வலிகளுக்கு பெருஞ்சீரகம் எப்படி உதவுகிறது.
பெருஞ்சீரகத்தில் அழற்சியை குறைக்கும் தன்மை உள்ளது. டிகே பப்ளீஸ்ஷிங் ஹவுஸ் வெளியிட்ட ‘ஹீலிங் புட்ஸ்' புத்தகத்தில் பெருஞ்சீரகத் தண்ணீர் பெண்களின் ஹார்மோன் சுரப்பை ஒழுங்குப் படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 

பெருஞ்சீரகத்தை இனிப்புகளிலும், மவுத் ஃபிரஷ்னராகவே பயன்படுத்துவது வழக்கம். பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரையே குடித்து வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறிவிடும். இதை டீ-டாக்ஸ் பானமாக கருதி குடிக்கலாம்.


டாக்டர். பரத் பி அகர்வால் எழுதிய ‘ஹீலிங் ஸ்பைஸஸ்' என்ற புத்தகத்தில் பெருஞ்சீரகத்தில்  வெலாட்டைல் ஆயில் (volatile oil) உள்ளது இதிலுள்ள பைட்டோகெமிக்கல்கள் (phytochemicals) இந்த கெமிக்கல் மாதவிடாயின் போது வரும் வலியை நீக்குகிறது.  “எஸ்ட்ரோஜன் போன்ற கலவைகள் தாவரங்களில் அதிகமாகவுள்ளது. இது மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் வலிக்கு நண்பனைப் போல் துணையாக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெருஞ்சீரக டீ அஜீரணக் கோளாறுக்கு மிகவும் ஏற்றது. இதைக் குடித்து வந்தால் மாதவிடாய் நேரத்தின் வலி குறையும். வல்லுநர்கள் பலரும் இந்த நீர் உடல் எடையையும்  குறைப்பதாக தெரிவித்துள்ளனர். இதை எளிமையாக வீட்டிலே தயாரிக்க முடியும்.


தேவையான பொருட்கள்
1 டேபுள்ஸ்பூன் பெருஞ்சீரகம்
1 கப் தண்ணீர்


செய்யும் முறை
கொதிக்கும் தண்ணீரில் பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. 
டீபாத்திர  வடிகட்டியில்  பெருஞ்சீரகத்தை வைக்கவும்.
அதன் மீது ஒரு கப் நீரை கொதிக்கவைத்து ஊற்றவும்.
5 நிமிடம் வைத்திருக்கவும்.
அதன்பின் அதை வடிகட்டி சூடாகக் குடிக்கலாம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...