Tuesday, April 28, 2020

குட்டி பாப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க போறீங்களா.. !


ஆறு மாத குழந்தைக்கான திட உணவு எப்படி இருக்க வேண்டும்

ஒரு குழந்தையின் முதல் உணவு, தாய்ப்பால். குறைந்தது ஆறு மாத காலத்துக்குப் பிறகு, திட உணவைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். தாய்ப்பாலுக்குப் பிறகு கொடுக்கும் முதல் திட இணை உணவு எப்படியிருக்க வேண்டும் என்பதை ரெசிப்பியாக சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நியூட்ரீஷியனிஸ்ட், பிரியா ராஜேந்திரன்.

 
குழந்தைகள் சரியான எடையின்றி மெலிந்து இருக்கிறது என்பதே எங்களைத் தேடிவரும் பெற்றோரின் மனக்குறையாக இருக்கிறது. இது தேவையற்ற கவலை. சராசரி எடை என்று ஒன்று வகுக்கப்பட்டிருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தபோது இருந்த எடையை வைத்தே இன்றைய எடையைக் கணக்கிட வேண்டும். சில குழந்தைகள் பிறக்கும்போது 3 கிலோ இருப்பார்கள். சில குழந்தைகள் 2.5 கிலோ இருப்பார்கள். எனவே, மற்ற குழந்தையின் வளர்ச்சியுடன் உங்கள் குழந்தையின் இன்றைய வளர்ச்சியை ஒப்பிட்டு, மெலிந்திருப்பதாக கவலைப்பட வேண்டாம். குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்று பாருங்கள். தாய்ப்பாலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு முதன்முதலாகத் திட உணவுகளைக் கொடுக்கும்போது எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம் என்பதில் பல தாய்மார்களுக்குக் குழப்பம் ஏற்படும். சிலர், விளம்பரங்களைப் பார்த்து, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை வாங்கி ஊட்டுவார்கள். இது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதற்குப் பதில், வீட்டிலே எளிமையாகவும் சுத்தமாகவும் தயாரித்த உணவுகளைக் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். இதோ அத்தகைய உணவுக்கான ரெசிப்பிக்கள்.


🥣அரிசிக் கஞ்சி:
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 500 கிராம்
பொரி கடலை - 200 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு - சிறிதளவு
செய்முறை:
உப்பு தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் தனித் தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு, மிக்ஸியில் சேர்த்து மாவாகத் திரித்துக்கொள்ளவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும். தேவையானபோது, இந்த மாவில் 3 டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். சிறிது கெட்டியானதும் உப்பு சேர்த்து, இறக்கவும். ஆறியதும் குழந்தைகளுக்கு ஊட்டவும்.
இந்தக் கஞ்சியை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பயன்:
அரிசி, பொரிகடலையில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துகள், குழந்தைக்குக் கிடைக்கும்.
🥣கேரட் கூழ்:
தேவையானவை:
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பாசிப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கேரட், உருளைக்கிழங்கு, பருப்பு மூன்றையும் வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து, மதிய நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பயன்: கேரட்டில் உள்ள 'வைட்டமின் சி' சத்து, குழந்தையின் பார்வைதிறனை அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகரிக்கும்.

🥣கிச்சடி:
தேவையானவை:
அரிசி - 6 கிராம்
பாசிப்பருப்பு - 10 கிராம்
நெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும். இதனை நன்கு மசிக்கவும். பிறகு, அடுப்பில் வாணலி வைத்து, மசித்துள்ள அரிசி, பருப்பு கலவையுடன், நெய், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்குக் கொதித்ததும் இறக்கிவிடவும். ஆறியதும் குழந்தைக்குக் கொடுக்கவும்.

🥣பப்பாளிக்கூழ்:
தேவையானவை:
பப்பாளி - 100 கிராம்
பால் - சிறிதளவு
செய்முறை:
பப்பாளியைச் சுத்தம்செய்து, பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தினமும் ஒரு வேளை குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பயன்: வயிற்றில் உள்ள குடற்பூச்சிகளை அழித்து, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

🥣கோதுமை மிக்ஸ்:
தேவையானவை:
கோதுமை - 35 கிராம் (ஆட்டா மா )
பாசிப்பயறு - 20 கிராம்
வேர்க்கடலை - 10 கிராம்
கருப்பட்டி - சிறிதளவு
செய்முறை:
தேவையானவற்றில் கருப்பட்டியைத் தவிர்த்து, மற்ற பொருள்களைச் சுத்தம் செய்து, தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்தவற்றை ஒன்றாகக் கலந்து, கருப்பட்டி சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். இதனை  பசும்பாலுடன்  கலந்து கொடுக்கலாம்.

➡️இணை உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டாலும், இரண்டு வயது வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

நன்றி :விகடன் ஹெல்த் 

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...