Thursday, May 28, 2020

மாதவிடாய் பற்றி A டூ Z சந்தேகங்கள்... தீர்வுகள்...!


உலகம் உருவானதிலிருந்தே பெண்களின் உடலில் நிகழ்கிற மாதவிடாய் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அது வலியுடன் நிகழ்கிறதா; அதுதொடர்பாகப் பெண்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்கின்றனவா என்கிற கேள்விகளெல்லாம் சமுதாயத்தில் எழவே இல்லை. காரணம், அதுவொரு ரகசிய நிகழ்வாக, வெளிப்படையாகப் பேசக்கூடாத நிகழ்வாகவே நம் எல்லோராலும் நினைக்கப்பட்டதுதான்.
ஆனால், சமீப சில வருடங்களாக மாதவிடாய் குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் பெண்கள் எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படியான கேள்விகளுக்கும் சந்தேங்களுக்கும் இயற்கை மருத்துவர் யோ.தீபா இங்கே தீர்வு சொல்கிறார்.

1. பீரியட்ஸ் வலி ஏன் ஏற்படுகிறது?

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் கருப்பையானது சுருங்கி, விரிந்து தனக்குள் இருக்கிற உதிரத்தை வெளியேற்ற ஆரம்பிக்கும். இந்த நிகழ்வு 3 - 5 நாள்கள் வரை நிகழும். கருப்பைச் சுருங்கி விரிவதில் இரண்டு விதம் இருக்கின்றன. ஒன்று, மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விரியும். அல்லது சுருங்கி விரிகிற வேலையைச் சரியாகச் செய்யாது. இதுதான் பீரியட்ஸ் வலிக்கான காரணம். இப்படியல்லாது கருப்பை சரியாகச் சுருங்கி விரிய ஆரம்பித்தால், சீரான ரத்தப்போக்கு நிகழ ஆரம்பித்துவிடும். சீரான ரத்தப்போக்கு வந்தவுடனே பீரியட்ஸ் வலியும் படிப்படியாகக் குறைந்துவிடும்.

2. யாருக்கெல்லாம் பீரியட்ஸ் வலி வரும்?

வாயுத்தொல்லை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும். உடம்பில் ரத்த அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் அனீமிக்காக இருந்தால்கூட, மாதவிடாய் ரத்தம் சீராக வெளியேற முடியாமல் வலி வரலாம்.

3. இந்த வலி வராமல் தடுக்க முடியுமா?

உடம்பில் வாயு சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய சாப்பிடுங்கள். வாயுவை வெளியேற்றுகிற பவன முக்தாசனம், சஸங்காசனம் இரண்டையும் ஒரு யோகா நிபுணரிடம் கற்றுக்கொண்டு செய்யுங்கள். பீரியட்ஸ் நாள்களில் உடல் உஷ்ணம் தணிக்க ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடியைக் கலந்து குடியுங்கள். பீரியட்ஸ் வலியிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

4. ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகுமா?

ஹார்மோன் சீரற்று இருப்பதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணம். இதைச் சரிசெய்ய சில யோகாசனங்கள் இருக்கின்றன. நான், சுலபமான தீர்வு ஒன்றைச் சொல்கிறேன். 100 கிராம் பனைவெல்லத்தை அடுப்பில் வைத்து இளக்குங்கள். இதனுடன் ஒரு முழுப் பூண்டை தோலுரித்துப் சிறியதாக போட்டுக் கிளறுங்கள். பிறகு, 50 கிராம் பொடித்த கருஞ்சீரகத்தைப் போட்டுக் கிளறுங்கள். கலவை இறுகி லேகியம் பதத்துக்கு வந்ததும் ஆறவிட்டு, அரை நெல்லிக்காய் அளவுக்குச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இதைத் தினமும் சாப்பிட்டு வர, சில மாதங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். நிறைய தண்ணீர் குடிப்பதும் மாதவிடாய் சீராவதற்கான ஒரு வழி.


5. சடங்காகும் பெண் குழந்தைகளுக்கு முதலில் எத்தனை நாள் மாதவிடாய் நிகழும்... அது எப்போது ஒழுங்குக்கு வரும்?

மாதவிடாய் நிகழும் நாள் கணக்கு சிறுமிக்குச் சிறுமி வேறுபடும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 10 நாள்கள் நிகழும். சில சிறுமிகளுக்கு தொடர்ந்து 15 நாள்கள் நிகழலாம். சிலருக்கு ஒரு மாதவிடாய் முடிந்த 15 நாளிலேயே அடுத்தது வந்துவிடலாம். ஹார்மோன்கள் சீராகி  28 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வர ஆறு மாதங்களிருந்து ஒரு வருடம் வரை ஆகும். 

6. மாதவிடாய் நேரத்தில் காய்ச்சல் மாத்திரை சாப்பிடலாமா?

மாதவிடாயின்போது கருப்பை சுருங்கி விரியும். அப்படிச் சுருங்கி விரியும்போது பெண்களின் உடலில் உஷ்ணம் அதிகமாகும். இந்த நேரத்தில் உடல் கதகதப்பாக இருப்பதைப் பல பெண்கள், 'உடம்பு சுடுது; பீவர் வந்துடுச்சு' என்று நினைத்துக்கொண்டு ஏதோவொரு காய்ச்சல் மாத்திரையைச் சாப்பிட்டுவிடுகிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? காய்ச்சல் மாத்திரைகளுக்கு வலியைக் குறைக்கிற தன்மையும் இருக்கிறது. அதைச் சாப்பிட்டவுடன் உடல் சட்டென்று வியர்த்து உஷ்ணம் குறைவதோடு, மாதவிடாய் நேரத்து வலியையும் உடனே குறைக்கும். பல இளம்பெண்கள், 'ஆஹா... காய்ச்சல் மாத்திரை போட்டால் பீரியட்ஸ் வலி குறைகிறதே' என்று இந்தப் பழக்கத்தை மாதந்தோறும் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதன் விளைவாகப் பின்னாளில் கருப்பையில் நீர்க்கட்டி வருவதில் ஆரம்பித்து, நார்க்கட்டி, குழந்தையின்மை என்று பிரச்னைகள் வரிசைகட்டலாம். 
8. பீரியட்ஸ் நேரத்தில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன?

வாயுத்தொல்லை தராத, எளிமையாகச் செரிமானமாகக்கூடிய எந்த உணவையும் சாப்பிடலாம். கூடவே, பழங்கள், நட்ஸ், டிரை ப்ரூட்ஸ் சாப்பிடுங்கள். அதிகப் புரதம் நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள், ஜங்க் புட்ஸ், பாட்டில் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

9. மாதவிடாய் நாள்களில் பிறப்புறுப்புப் பகுதியில் சோப் வாஷ் செய்வது சரியா?
சோப், வஜைனல் வாஷ் எதுவாக இருந்தாலும் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிக்கு மட்டுமே பயன்படுத்தவும். உள்பகுதியை நாப்கின் மாற்றும்போதெல்லாம் வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும். சிலர் பீரியட்ஸ் நேர கசகசப்புத் தாங்காமல் பிறப்புறுப்பின் உள்பகுதியிலும் சோப் வாஷ் செய்வார்கள். இது தவறு. ஒவ்வொரு மாதமும் இப்படியே செய்துவந்தால், அந்தப் பகுதியில் இருக்கிற வழுவழுப்புத்தன்மை சுத்தமாகப் போய் வறண்டுவிடும். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பகுதியில் புண் வந்துவிட்டால், அது ஆறவே ஆறாது.

10. மாதவிடாய் உதிரத்தின் நிறத்தை வைத்து நம் ஆரோக்கிய நிலையை அறிந்துகொள்ள இயலுமா?
நல்ல சிவப்பு நிறம்தான் மாதவிடாய் உதிரத்தின் சரியான நிறம். பிரவுன் கலரில் நீர்போல வெளியேறினால், கருப்பையில் கசடு இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியைச் சேர்த்து தினமும் குடித்து வந்தால், கசடுகள் நீங்கி உதிரம் சிவப்பு நிறமாக வெளியேறும். 

11. மாதவிடாய் நாள்களில் ஸ்வீட் சாப்பிடலாமா? சாப்பிட்டால் ரத்தப்போக்கு அதிகமாகும் என்று சொல்லப்படுகிறதே...
மாதவிடாய் நாள்களில் இனிப்புச் சாப்பிட்டால், ரத்தப்போக்கு அதிகமாகாது. பொதுவாக இனிப்புச்சுவை மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதால், அந்த சந்தோஷம் ரத்தப்போக்கை சுலபமாக்கிக் கொடுக்கும். இதனால், அந்த நேரத்து வலி குறைந்து சௌகர்யமாக உணர்வீர்கள். இப்படிச் சுலபமாக ரத்தம் வெளியேறுவதைத்தான் 'பீரியட்ஸ் அதிகமா போகுது' என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...